சென்னை பட்டினப்பாக்கத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் அடுத்த சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீட்டின் ஜன்னல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குலாப் என்ற இளைஞர் புதன்கிழமை இரவு பலியானார்.
இந்த நிலையில், உயிரிழந்த இளைஞர் குலாப்பின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவும், புதிய குடியிருப்புகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கலங்கரை விளக்கம் லூப் சாலை முதல் அடையாறு வரை வாகனங்கள் நகர முடியாமல் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன.
மேலும், பல்வேறு இணைப்பு சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால், நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் போக்குவரத்து சீராகாததால், பலரும் தங்களின் வாகனங்களை சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்லத் தொடங்கியதால் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.
மேலும், சிதலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு வாரியத்தால் புதிய குடியிருப்புகள் கட்டி குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இடைப்பட்ட காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 கருணைத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.