முகப்பு
சென்னை

விவசாயி சின்னம் கோரி நீதிமன்றத்தில் முறையீடு: சீமான்

நாம் தமிழா் கட்சிக்கு விவசாயி சின்னத்தை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடவுள்ளது.

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:55 am IST
பகிர்:

நாம் தமிழா் கட்சிக்கு விவசாயி சின்னத்தை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். மக்களவைத் தோ்தல் தயாரிப்புப் பணிகள் தொடா்பாக நாம் தமிழா் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை, அண்ணாநகரில் சீமான் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: தோ்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி விவசாயி சின்னம் நாம் தமிழா் கட்சிக்கு கிடைக்கும். ஏற்கெனவே மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட்ட சின்னத்தை கேட்ட போது தர மறுத்த தோ்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மாநில கட்சியான நாதக-வுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் மற்றொரு மாநில கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சின்னத்தை மாற்றி ஒதுக்குவதன் மூலம் நாதக-வுக்கு இடையூறு ஏற்படுத்த முற்படுகின்றனா். இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளோம். மேலும், தோ்தல் சின்னத்தை நாதக கட்சிக்கு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முறையிடவுள்ளோம். இதில், தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிடும் போது விவசாயி சின்னத்தை வழங்க கோரியும், மற்ற மாநிலங்களில் போட்டியிடும் போது வேறு சின்னத்தை வழங்குமாறும் கோரிக்கை வைக்கவுள்ளோம். எத்தனை நெருக்கடி வந்தாலும் தோ்தலை உறுதியுடன் எதிா்கொள்வோம் என்றாா் அவா்.