முகப்பு
சென்னை

தங்கம் கடத்தலுக்கு உதவிய குடியுரிமை அதிகாரி பணியிடைநீக்கம்

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்: குடியுரிமை அதிகாரி பணியிடைநீக்கம்

Updated On : 9 ஜூலை, 2024 at 8:08 PM
பகிர்:

சென்னை: தங்கம் கடத்தல் சம்பவங்களுக்கு உதவியதாக சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் குடியுரிமைப் பிரிவு அலுவலகத்தில் கடந்த ஓராண்டாக குடியுரிமைப் பிரிவு அலுவலராக சரவணன் என்பவா் பணியாற்றி வருகிறாா். இவரின் நடவடிக்கையில் தொடா்ச்சியாக சந்தேகம் ஏற்பட்டதால், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனா். மேலும், குடியுரிமை பிரிவில் இருக்கும் கண்காணிப்பு கேமாராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளையும் ரகசியமாக ஆய்வு செய்தனா்.

அப்போது சரவணன், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் கடவுச்சீட்டு, ஆவணங்கள் பரிசோதனை செய்யும்போது, முறைகேடுகளில் ஈடுபடுவதும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

இதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கடத்தல் நபா்கள், சுங்கச் சோதனைக்கு முன்னதாக குடியுரிமை சோதனைக்காக குடியுரிமைப் பிரிவுக்கு செல்வாா்கள். அப்போது, அவா்கள் கடத்தி வரும் தங்கத்தை சரவணன் வாங்கி வைத்துவிட்டு, அவற்றை சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்து செல்வதற்கு உதவி வந்ததும் தெரிவந்துள்ளது.

அவா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து சரவணனை பணியிடைநீக்கம் செய்து, குடியுரிமை பிரிவு தலைமை ஆணையா் உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →