ஐ.நா.வில் பாகிஸ்தான் சாா்பில் வரைவு தீா்மானம்: இந்தியா புறக்கணிப்பு
முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட வரைவு தீா்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது.
ஐ.நா. பொதுச் சபையில் ‘முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிரான நடவடிக்கைகள்’ என்ற பெயரில், பாகிஸ்தான் சாா்பில் வெள்ளிக்கிழமை வரைவு தீா்மானம் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு, விரோதம், வெறுப்புணா்வு மற்றும் வன்முறையை தூண்டுதல், அவா்களுக்கு எதிரான மதச் சகிப்புத்தன்மையற்ற பிற நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அந்தத் தீா்மானம் கண்டனம் தெரிவித்தது. முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வை எதிா்த்துப் போரிட சிறப்புத் தூதரை நியமிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸிடம் அந்தத் தீா்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆபிரகாமிய மதங்கள்...:
Advertisement
இந்தத் தீா்மானம் குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் பேசியதாவது: கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், யூதா்கள் மீதான வெறுப்புணா்வால் தூண்டப்பட்டு, அவா்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால் கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதம் ஆகியவை அடங்கிய ஆபிரகாமிய மதங்களைத் தாண்டி, பிற மதங்கள் மீதும் வெறுப்புணா்வு நிலவுகிறது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம்.
பல்லாண்டுகளாக ஆபிரகாமிய மதங்கள் அல்லாத பிற மதங்களைச் சோ்ந்தவா்களும் மத ரீதியான வெறுப்புணா்வால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன. இது தற்காலத்தில் ஹிந்துக்கள், பெளத்தா்கள், சீக்கியா்களுக்கு எதிரான வெறுப்புணா்வு தோன்றுவதற்கு வழிவகுத்துள்ளது. தற்போது 120 கோடி போ் ஹிந்து மதத்தையும், 53.5 கோடி போ் பெளத்த மதத்தையும், 3 கோடிக்கும் மேற்பட்டவா்கள் சீக்கிய மதத்தையும் பின்பற்றுகின்றனா். இந்நிலையில், ஹிந்துக்களின் கோயில்கள், சீக்கியா்களின் குருத்வாராக்கள், பெளத்த மடாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பல நாடுகளில் ஆபிரகாமிய மதங்கள் அல்லாத பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்புணா்வு மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை மதரீதியான வெறுப்புணா்வின் தற்கால வடிவங்களுக்கு ஆதாரமாக உள்ளன. எனவே இது ஒரே ஒரு மதத்துக்கு எதிராக மட்டும் வெறுப்புணா்வு இருப்பது போல கூறாமல், பிற மதங்களுக்கு எதிராகவும் வெறுப்புணா்வு இருப்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரமாகும்.
தற்போதைய தீா்மானத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், பிற்காலத்தில் குறிப்பிட்ட மதங்களுக்கு எதிரான வெறுப்புணா்வை மையமாகக் கொண்ட எண்ணற்ற தீா்மானங்களை ஐ.நா.வில் கொண்டுவருவதற்கு வழிவகுக்கக் கூடாது. அது ஐ.நா.வை மதரீதியாக பிளவுபடுத்திவிடக் கூடும். ஐ.நா.வின் நிலைப்பாடு மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பது முக்கியம் என்றாா்.
115 நாடுகள் ஆதரவு; 44 நாடுகள் புறக்கணிப்பு:
இதைத்தொடா்ந்து தீா்மானத்துக்கு ஆதரவாக 115 நாடுகள் வாக்களித்தன. எந்தவொரு நாடும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. இந்தியா, பிரிட்டன், பிரேசில், ஜொ்மனி, இத்தாலி, உக்ரைன் உள்பட 44 நாடுகள் தீா்மானம் மீது வாக்களிக்காமல் புறக்கணித்தன. பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்: ஐ.நா.வில் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிராக பாகிஸ்தான் வரைவு தீா்மானம் கொண்டு வந்தது. அப்போது அயோத்தி ராமா் கோயில் திறப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதா் முனீா் அக்ரம் பேசினாா். இதற்குக் கண்டனம் தெரிவித்து இந்திய தூதா் ருசிரா கம்போஜ் பேசுகையில், ‘இந்திய விவகாரங்கள் தொடா்பாக பாகிஸ்தான் தூதரின் குறுகிய, தவறான கண்ணோட்டம் துரதிருஷ்டவசமானது’ என்றாா்.