படுகொலையை மாற்ற முயற்சி! - ஆப்கன் மருத்துவமனை மீதான பாக். தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!
ஆப்கன் மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது...
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 2000 படுக்கைகள் கொண்ட உமர் போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது திங்கள்கிழமை (மார்ச் 16) இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 250-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படுகொலையை பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையாகச் சித்தரிக்க முயற்சிப்பதாகக் கூறிய இந்திய அரசு, இந்தத் தாக்குதலுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ராணுவ இலக்காக நியாயப்படுத்த முடியாத ஓர் இடத்தின் மீது பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல் ஒரு கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறைச் செயல். இந்தப் படுகொலையை ஒரு ராணுவ நடவடிக்கை போல சித்தரிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த சில நாள்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையில் எல்லையைக் கடந்த தாக்குதல்கள் நடைபெற்று வந்தன.
பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு முக்கியமான காரணம் எனக் குற்றம்சாட்டிய பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையாக முதலில் தாக்குதல்களைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.