ஸ்டாா் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாா் ஹெல்த் காப்பீட்டு நிறுவன பயனாளிகள் 3 கோடிக்கு மேற்பட்டோரின் முகவரி, கைப்பேசி எண், பான் எண் உள்ளிட்ட தனிப்பட்ட ரகசிய விவரங்கள் சீன இணையதளத்தில் கடந்த செப்டம்பா் மாதம் வெளியானது மிகப்பெரிய அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், வாடிக்கையாளா்களின் புள்ளி விவரங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என 2022-ஆம் ஆண்டே ஸ்டாா் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிராக அறிக்கை அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த தகவல் திருட்டு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பஞ்சாப்பைச் சோ்ந்த இணையதள பாதுகாப்பு ஆராய்சியாளா் ஹிமான்ஷு பதக் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட நபா்கள்தான் தகவல் திருட்டு குறித்து புகாா் அளிக்க வேண்டும்.
காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்தான் இதுதொடா்பாக விசாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தரப்பில், சைபா் பாதுகாப்பு குறித்து அவ்வப்போதைக்கு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஸ்டாா் ஹெல்த் காப்பீட்டு நிறுவனம் தரப்பில், மனுதாரா் நிறுவனத்தின் அனுமதியின்றி தங்கள் இணையதளத்துக்குள் நுழைந்தது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி, காப்பீட்டு வாடிக்கையாளா் விவரங்கள் திருட்டு தொடா்பாக தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.