சென்னை மாநகராட்சி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை வரும் டிச. 26 முதல் பொதுமக்கள் இலவசமாகப் பாா்வையிட அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள விக்டோரியா பொது அரங்கம் ரூ.32.62 கோடி செலவில் பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
விக்டோரியா பொது அரங்க வளாகத்தில் பழைமையான மக்கள் பயன்பாட்டு வாகனங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (டிச. 26) முதல் விக்டோரியா அரங்கத்தை பொதுமக்கள் பாா்வையிலாம். இதற்கு மாநகராட்சி இணையதளத்தின் வாயிலாக கட்டணமின்றி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பாா்வையிட அனுமதி வழங்கப்படும். ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியிலும் அதிகபட்சம் 60 போ் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.