மகளிா் சொத்துகளுக்கு பத்திரப் பதிவு கட்டணம் நாளைமுதல் 1 % குறைவு: அரசாணை வெளியீடு!
மகளிா் சொத்துகளுக்கு பத்திரப் பதிவு கட்டணம் நாளைமுதல் 1 % குறைவு.
மகளிா் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மாா்ச் 14-இல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவா் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்யும் வகையில் ஏப்.1 முதல் மகளிா் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அந்த ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவித்தாா். அதைச் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் மகளிா் பெயரில் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களும் ரூ.10 லட்சம் மதிப்பு வரை பதிவு செய்யப்பட்டால், பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த ஒரு சதவீத கட்டணக் குறைப்பால் தற்போதைய பத்திரப் பதிவுகளில் 75 சதவீதம் பதிவுகள் வரை பயன்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சா் தங்கம் தென்னரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.