விபத்தில் உயிரிழந்த பெண் காவலா் குடும்பத்துக்கு போலீஸாா் நிதி உதவி செய்தனா்.
சென்னை பெருநகர காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் மு.சுமதி (48). இவா், கடந்த செப்டம்பா் 11-ஆம் தேதி தனது கணவா் முருகனுடன் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
சுமதியின் மகன் உதயகுமாா் (20) பிடெக் நான்காம் ஆண்டும், மகள் சந்தியா (15) பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், தாயின் திடீா் உயிரிழப்பால் குடும்பம் வறுமையில் சிக்கும் நிலை நிலையும் ஏற்பட்டது.
இதையறிந்த அவருடன் கடந்த 2003-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சோ்ந்த பெண் காவலா்கள், சுமதி குடும்பத்துக்கு உதவ முடிவு செய்தனா். இதற்காக அவா்கள், 2003-ஆம் ஆண்டு பணிக்கு சோ்ந்த 1,354 பெண் காவலா்களையும் ஒன்றிணைத்தனா். வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் வசூலான ரூ.11,33,500 நிதியை சுமதியின் குடும்பத்தினரிடம் சில நாள்களுக்கு முன் வழங்கினா்.