நாய்களுக்கு உணவளிப்பதில் ஆர்வலர்கள், பொதுமக்கள் மோதல்! அம்பத்தூரில் பரபரப்பு!
அம்பத்தூர் பகுதியில் நாய்களுக்கு உணவு அளிப்பதில் விலங்கு ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அம்பத்தூர் பகுதியில் நாய்களுக்கு உணவு அளிப்பதில் விலங்கு ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அம்பத்தூர் விஜிஎன் நகரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற பெண்ணை நாய் ஒன்று துரத்திக் கடித்தது. இந்த நிலையில், அப்பகுதியில், வசித்து வரும் ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் டிஐஜியான கிருஷ்ணமூர்த்தி (63) தெரு நாய்களுக்கு தினமும் உணவளிப்பதாகவும், இதனால் அப்பகுதியில் அதிகப்படியான தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும் அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், தெரு நாய்களை அப்பகுதிவாசிகள் கொடுமைப்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் கள அலுவலர் பால் ஆபிரகாம் (25) என்பவர் சனிக்கிழமை அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த குடியிருப்போர் அங்கு சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
Advertisement
Advertisement
அப்போது பால் ஆபிரகாமுக்கும், குடியிருப்போர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில், அப்பகுதிவாசிகள் தாக்கியதில், பால் ஆபிரகாம் முகத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, பால் ஆபிரகாம் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதனிடையே, சென்னை பல்வேறு பகுதிகளில் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை அம்பத்தூர் விஜிஎன் நகருக்கு வந்தனர். அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளை அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு வழங்கினர். இதைப்பார்த்த குடியிருப்போர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விலங்குகள் நல பெண் ஆர்வலர் ஒருவர் கீழே விழுந்து கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார், இருதரப்பையும் சமரசம் செய்ய முயன்றனர். இருதரப்பினரும் மாறி, மாறி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.