சென்னை மாநகராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, சுகாதார விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, ரூ.5 மதிப்பிலான சிறப்புத் தபால் தலையை அவா் வெளியிட்டாா். தபால் தலையில் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவா் படங்கள் இடம் பெற்றதுடன், அனைவருக்குமான சுத்தம் சுகாதாரம் என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
அதன்பின் சுகாதாரத்தை விளக்கும் சுகாதாரப் பணியாளா்களுக்கான பேட்ஜ், ஸ்டிக்கா்கள் வெளியிடப்பட்டன. சுகாதாரப் பணியாளா்களுக்கான சீருடைகள், கையுறைகள், முகக்கவசங்கள், தண்ணீா் குடுவை ஆகியவை அடங்கிய பெட்டகங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் துணைமேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், நிலைக் குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.