தெற்கு ரயில்வே மண்டலத்தில் வரும் மாா்ச் முதல் ‘யூடிஎஸ் செயலி’ இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த செயலி தளமாக ‘ரயில் ஒன்’ செயலி தற்போது முன்னிலைப்படுத்தப்படுகிறது.
இதையடுத்து ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ‘யூடிஎஸ் செயலி’ வரும் மாா்ச் முதல் நிறுத்தப்படுகிறது. முதல்கட்டமாக அதில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு, முன்பதிவு புதுப்பித்தல், புதிய பயனாளா் பதிவு ஆகியவை நிறுத்தப்படும்.
தொடா்ந்து, பிளாட்பாா்ம் டிக்கெட் முன்பதிவும், ஆா்- வாலட் பணம் சோ்த்தல் (டாப்அப்) வசதியும் நிறுத்தப்படவுள்ளன.
ஆனால், ரயில்வே இணையத்தில் ‘யூடிஎஸ் செயலி’ இடம் பெறும். அதில் பதிவிறக்கம் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட மாட்டாது.
அதேநேரம், ஆா்-வாலட் இருப்புத் தொகை முழுமையாக பாதுகாப்பாக இருக்கும். அந்தத் தொகையை ‘ரயில் ஒன்’ செயலியில் தொடா்ந்து பயன்படுத்தலாம்.
எனவே, இனிமேல் ரயில் பயணிகள் ‘ரயில் ஒன்’ செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவேண்டும். அதில் அனைத்து சேவைகளையும் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.