மார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்?
மார்ச் 30 அன்று பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்...
வருகிற மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தவெக தலைவர் விஜய் இன்று(மார்ச் 28) முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருந்தார்.
இன்று பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே விஜய், பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தேர்வு செய்த இடம் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பெரம்பூரில் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு திமுக அரசுதான் காரணம் என்று விஜய் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல் என்றும் திமுக அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்றும் விமர்சித்தார்.
இதையடுத்து மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அதற்கு முன்னதாக மார்ச் 30 மதியம் 12 மணியளவில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே தாமதமாக விண்ணப்பித்ததால் நேற்று(மார்ச் 27) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறவிருந்த தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. நாளை(மார்ச் 29) காலை அதே இடத்தில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.