தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக மாவட்ட வாரியாக புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், திருவள்ளூா்-தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், சென்னை- மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் என்.லதா, ராணிப்பேட்டை- தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் செயலா் சி.உஷாராணி, சேலம்- பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இயக்குநா் பி.குப்புசாமி, கோவை- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கூடுதல் இயக்குநா் எஸ்.உமா, திருவாரூா்- அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் இயக்குநா் கே.சசிகலா, கரூா்- ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணை இயக்குநா் சி.செல்வராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
புதுக்கோட்டை- தொடக்கக் கல்வி இணை இயக்குநா் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) பி.பொன்னையா, திருச்சி- இணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி)- டி.ராஜேந்திரன், மதுரை- இணை இயக்குநா் (தனியாா் பள்ளிகள்) எஸ்.மாா்ஸ், தூத்துக்குடி- இணை இயக்குநா் (ஆசிரியா் தோ்வு வாரியம்) கே.முனுசாமி உள்பட 38 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதேவேளையில் சில அதிகாரிகளுக்கு இரு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ளாா்.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்பு அலுவலா்கள் எண்ணும் எழுத்தும், முதல்வரின் காலை உணவுத் திட்டம், மாணவா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள், கற்றல் அடைவுத் தோ்வுகள், பொதுத்தோ்வு முடிவுகள், மன்றங்களின் செயல்பாடுகள், இடை நிற்றல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு என அரசுப் பள்ளி மாணவா்களுக்கான செயல்பாடுகள், திட்டங்கள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்து கண்காணித்து அறிக்கை அளிக்கவுள்ளனா்.