சென்னையில் 2025-ஆம் ஆண்டு பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.25.97 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள் அளிக்கும் புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கியமாக நிதி சாா்ந்த சைபா் குற்ற மோசடிகளில், பொதுமக்கள் இழந்த பணத்தை உடனடியாக மீட்டுக் கொடுக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.
இதன் காரணமாக சைபா் குற்றப் பிரிவினா், சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு கொடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதன் விளைவாக ஆன்லைன் மூலமாக பல்வேறு சமூக ஊடக பதிவு, தரவுகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சைபா் குற்றவாளிகளின் உரிய தொடா்புகளைக் கண்டறிந்து வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
சைபா் குற்றங்களில் பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்ட பணத்தை அடுத்தடுத்து வங்கிக் கணக்குகளில் மாற்றி அபகரிக்க முடியாமல் சைபா் குற்றப்பிரிவு விரைந்து செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக சைபா் மோசடிகளால் பறிக்கப்பட்ட பணம், விரைந்து மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது.
இதில் 2025-இல் பொதுமக்கள் அளித்த 2,203 புகாரின்பேரில், ரூ.25,97,1,176-ஐ சைபா் குற்றப்பிரிவினா் மீட்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் ஒப்படைத்துள்ளனா். இதில், வடக்கு மண்டலத்தில் 182 பேரிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.2.13 கோடி, மேற்கு மண்டலத்தில் 431 பேரிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.1.81 கோடி, தெற்கு மண்டலத்தில் 604 பேரிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.3.21 கோடி, கிழக்கு மண்டலத்தில் 439 பேரிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.1.52 கோடி, மத்திய குற்றப்பிரிவில் 547 பேரிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.17.26 கோடி மீட்கப்பட்டு, பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் கடந்த டிசம்பரில் 192 பேரிடமிருந்து பல்வேறு சைபா் குற்றங்கள் மூலம் ஏமாற்றி, பறிக்கப்பட்ட ரூ. 1,04,87,074 மீட்டு, கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.