மின்விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம்
காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விபத்து குறித்த பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கி மின்வாரியத்தினர்
காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விபத்து குறித்த பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கி மின்வாரியத்தினர் வியாழக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்துடன், மின்விபத்து குறித்த அவசர எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் கனமழை இருக்கும் என அறிவித்துள்ளது.
அதன்படி, தேங்கிய மழைநீருக்கு அருகே மின் கம்பங்கள், அறுந்து விழுந்த மின் கம்பிகள் உள்ளிட்டவற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும், மின் வாரிய ஊழியர்களை தொடர்பு கொள்ளும் வகையிலும், வியாழக்கிழமை மின்ஊழியர்கள் பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம், மாகரல் ஆகிய துணை மின் நிலையம் சார்பில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலமாகவும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை, காஞ்சிபுரம் மேற்பார்வைப் பொறியாளர் சி.கிருஷ்ணகுமார் காஞ்சிபுரம், மாகரல் அருகே வேடல் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி வைத்தார்.
இந்த துண்டுப் பிரசுரத்தில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாதீர்கள். வீட்டு மின் கம்பிகளை தரையின் மீது எடுத்துச் செல்லாதீர்கள். துணிகளை மின்கம்பிகளில் உலர்த்தாதீர்கள். ஈர கைகளில் மின் சாதனங்களை தொடாதீர்கள். மின்கம்பிகளை கொம்பு மற்றும் நெகிழி குழாய்களைக் கொண்டு தொடாதீர்கள். தாழ்வாக மின்கம்பிகள் செல்வதை அறிந்தால் உடனடியாக மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவசர எண்கள்: அத்துடன், மாகரல் துணை மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் மின்விபத்து ஏற்பட்டால், உதவிப் பொறியாளருக்கு 044 27240313 எனும் தொலைபேசி எண்ணிலும், செயல் முகவர்கள், மின்பாதை ஆய்வாளர் ஆகியோருக்கு 9445855191, 9445850638, 9445850504 எனும் செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். அதுபோல், களக்காட்டூர், குருவிமலை, வளத்தோட்டம், வேடல், மேல்பெரமநல்லூர் பகுதிகளுக்கு 9444660410, 7200361682 என்ற செல்லிடப்பேசி எண்களிலும், பெரியாநாத்தம், காலூர், கீழ்பெரமநல்லூர் பகுதிகளுக்கு 9445850507, 9994550229, 9597704686 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும், ஆர்ப்பாக்கம் பகுதிக்கு 9445850522, 9789583449 மற்றும் ஆதவப்பாக்கம், புத்தளி, புளிவாய் பகுதிகளுக்கு 9445113615, 9566805179, 7708852472 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரசாரத்தில், காஞ்சிபுரம் தெற்கு செயற்பொறியாளர் சி.சிவராஜ், உதவிப் பொறியாளர் கட்டுமானம் எஸ்.விஜயகுமார், மாகரல் உதவிப் பொறியாளர்
எம்.ஹரிதாஸ் உள்ளிட்ட திரளான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.