மாசடைந்துள்ள செங்காடு முத்துவீராசாமி கோயில் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், செங்காடு ஊராட்சியில் முத்துவீராசாமி கோயிலுக்குச் சொந்தமான குளம், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளத்தின் நீரை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். தற்போது இக்குளம் மாசடைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கோயில் குளத்தின் நீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தோம். சில ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமல் இருப்பதால் பாசிகள் படர்ந்துள்ளன. இதனால் நீரை பயன்
படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் முத்துவீராசாமி கோயில் தீமிதி திருவிழாவுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தற்போது குளம் மாசடைந்துள்ளதால் நீரில் குளிக்க பக்தர்கள் அஞ்சுகின்றனர்.
செங்காடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நிலத்தடி நீராதாரமாக உள்ள இக்குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றனர்.