மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனச் சான்று: ஆட்சியர் வழங்கினார்
மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனச் சான்றுகளை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனச் சான்றுகளை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், புற உலகு சிந்தனையற்றோர், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பாதுகாவலர் நியமனச் சான்று வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஸ்ரீநாத் கூறியது: மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பாதுகாவலர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்காக, மனவளர்ச்சி குன்றியோரை முறையாகப் பராமரிப்பது, பாதுகாப்பது, நிதியைக் கையாள்வது உள்ளிட்ட விஷயங்களில் குளறுபடிகள் இருந்து வந்தன. இதனால், பெரும்பாலான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பாதுகாப்பு, பராமரிப்பு கிடைக்கப் பெறாமல் இருந்து வந்தது.
இதனை முறைப்படுத்தும் வகையில், பாதுகாவலர் நியமனச் சான்று வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, உரிய மனவளர்ச்சி குன்றியோருக்கு ஆன்லைன் மூலம் பாதுகாவலர் நியமனச் சான்று விவரங்கள் பதிவேற்றப்பட்டன.
இவ்விவரங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டன. அதோடு, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, ஒப்புதல் பெற்ற 5 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனச் சான்றினை ஆட்சியர் வழங்கியுள்ளார் என்றார் அவர்.