கல்குவாரியைத் தடைசெய்யக் கோரி கிராமத்தினர் ஆட்சியரிடம் மனு
கல்குவாரியைத் தடைசெய்யக் கோரி ஆலஞ்சேரி கிராமத்தினர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு
கல்குவாரியைத் தடைசெய்யக் கோரி ஆலஞ்சேரி கிராமத்தினர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து கிராமத்தினர் அளித்த மனுவில் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பில் கல்குவாரி உள்ளது. தனியார் கல்குவாரி 20 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இக்கிராமத்தைச் சுற்றி அருங்குன்றம் பழவேரி, திருமுக்கூடல், அரும்புலியூர் காவணிப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் ஏறத்தாழ 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களும் கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் உள்ளன. இப்பகுதியில், அமைக்கப்பட்டிருக்கும் கல்குவாரியில் பாறையைத் தகர்ப்பதற்காக வைக்கப்படும் வெடி பெரும் புகை மூட்டத்தையும் இரைச்சலையும் ஏற்படுத்துகிறது.
இதிலிருந்து சிதறும் கற்கள் விவசாய நிலங்களில் விழுகின்றன. இதனால் விளைச்சல் குறைவதோடு மண்ணின் தன்மையும் மாறுபடுகிறது. மேலும் மலையில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைவதோடு நிலத்தடி நீர் மட்டமும் மிகவும் குறைந்துள்ளது. மேலும் காற்றில் பறந்துவரும் சிதறல்களாலும் இரைச்சலாலும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதய பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுக்கிறது. எனவே கிராம மக்களையும் விவசாயத்தையும் கால்நடைகளையும் பாதுகாக்கும் வகையில் கல்குவாரிக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.