ஸ்ரீபெரும்புதூரில் ரூ.8 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டடத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா சனிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் பழைய பள்ளிக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பீமன்தாங்கல் பகுதியில் ரூ.8 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இந்த புதிய கட்டடத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா காணொலி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி, அரசு வழக்குரைஞா் யோகநாதன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் பழனி, செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.