காஞ்சிபுரம் அருகே ஆதரவற்ற 4 சிறுமிகளுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு
காஞ்சிபுரம் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகளுக்கு சனிக்கிழமை கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகளுக்கு சனிக்கிழமை கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் அரசு அனுமதியுடன் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 94 சிறார்கள் தங்கியிருந்து அருகிலுள்ள சுற்றுவட்டாரப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இவர்களில் 15 வயதுள்ள 4 சிறுமியர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்ததாக தெரியவந்ததையடுத்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 4 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.இது குறுத்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 4 பேருக்கு சுகவீனம் ஏற்பட்டது.
உடனடியாக கரோனா பரிசோதனை செய்தோம். 4 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பதும் உறுதியானதால் உடனடியாக அவர்கள் உத்தரமேரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுடன் இருந்த மற்ற 90 பேருக்கும் சனிக்கிழமை கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் யாருக்கேனும் தொற்று இருப்பது தெரிய வந்தால் அவர்களும் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள்.
தொற்று இல்லாத சிறார்களை உறவினர்களிடமோ அல்லது பாதுகாவலரிடமோ ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.