காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தின் சோதனைச் சாவடியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.49லட்சத்தை திங்கள்கிழமை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டு ஆங்காங்கே அதிகாரிகள் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க- ம.பி.யில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன
காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பறக்கும்படை வட்டாட்சியர் வரதராஜன் தலைமையிலான குழுவினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் எந்த வித ஆவணங்களுமின்றி ரூ.1,49,800 இருந்தது தெரிய வந்தது. அப்பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைத்துள்ளனர்.