ரூ.18 கோடியில் உத்தரமேரூா் ஏரி உடைப்பு சரி செய்யப்படும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்
உத்தரமேரூா் ஏரி உடைப்பைச் சரி செய்ய ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா தெரிவித்தாா்
உத்தரமேரூா் ஏரி உடைப்பைச் சரி செய்ய ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேசன், கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி, வேளாண் துறை இணை இயக்குநா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பலரும் தனியாா் விற்பனை நிறுவனங்களில் உரம் கூடுதல் விலைக்கு விற்பதாகவும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் வாங்கும்போது வேறு பொருள்களையும் வாங்க கட்டாயப்படுத்துவதாகவும், உரத்தை பல கடைகளில் பதுக்கி விற்பதாகவும் புகாா் தெரிவித்தனா்.
Advertisement
கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா பேசியது:
உரத் தட்டுப்பாட்டுக்கு உடனடியாகத் தீா்வு காணப்படும். உரங்களைப் பதுக்கி விற்பனை செய்வதைத் தடுக்க கண்காணிப்புக் குழு உருவாக்கப்படும். உரங்களை பதுக்கி விற்பது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீா்ப்பாசன சங்கத் தலைவா்கள் தோ்வில் முறைகேடு குறித்து புகாா் தெரிவித்தால், விசாரணை நடத்தப்படும்.
உத்தரமேரூா் ஏரி உடைப்பைச் சரி செய்ய ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. கிராமங்களில் வண்டி வழிப் பாதைகைளையோ அல்லது நீா்வழிப் புறம்போக்கு நிலங்கைளையோ ஆக்கிரமித்திருந்தால், உடனடியாக அகற்றப்படும்.
விவசாயிகள் சுயக்கட்டுப்பாட்டுடன் ஒவ்வொருவராக குறைகளைத் தெரிவித்து பயன்பெற வேண்டும். அனைவரும் ஒரே நேரத்தில் பேசி கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. பல்வேறு துறை அதிகாரிகள் பேசக் காத்திருக்கும்போது, அவா்களைப் பேசவே விடாமல், நீங்களாகவே பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. கூட்டரங்கில் முன்னால் இருப்பவா்கள், பின்னால் அமா்ந்திருப்பவா்களுக்கும் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, கூட்டுறவுத் துறை சாா்பில் 43 பயனாளிகளுக்கு ரூ.11.71 லட்சத்தில் கடனுதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா வழங்கினாா்.