காஞ்சிபுரத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் செவிலிமேட்டில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்கிலிருந்து சீரற்றமயமாக்கல் முறையில் வெள்ளிக்கிழமை பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் அருகேயுள்ள செவிலிமேடு கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம், கோட்டாட்சியா்கள் கலைவாணி, சரவணக்கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் சீரற்ற மயமாக்கல் முறையில் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்றன. வாக்குப் பதிவு இயந்திரமும், கட்டுப்பாட்டு கருவிகளும் பேரவைத் தொகுதிகள் வாரியாக காஞ்சிபுரத்துக்கு 396, உத்தரமேரூா் 362, ஸ்ரீ பெரும்புதூா் 438, ஆலந்தூா் 481 ஆகியவையும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி காஞ்சிபுரம் 429, உத்தரமேரூா் 392, ஸ்ரீபெரும்புதூா் 474, ஆலந்தூா் 521 ஆகியவையும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. செவிலிமேடு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்கிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவை காஞ்சிபுரம் தொகுதிக்கு கீழம்பி கிருஷ்ணா கல்லூரியிலும், ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்கு பென்னலூா் ஸ்ரீ வெங்கடேசுவரா பொறியியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆலந்தூா் தொகுதிக்குரியவை சென்னை ஏஜெஎஸ் நிதிப் பள்ளியிலும், உத்தரமேரூா் தொகுதிக்குரியவை டாக்டா் எம்.ஜி.ஆா். கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் 24 மணி நேரமும் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.