வரும் 15-இல் வாலாஜாபேட்டை, கலவை வட்டங்களில் ஜமாபந்தி
வாலாஜாபேட்டை, கலவை வட்டங்களில் வரும் 15-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை, கலவை வட்டங்களில் வரும் 15-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராம கணக்குகள் குறித்த ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கிராம கணக்குகள் குறித்த தணிக்கை வாலாஜாபேட்டை, கலவை வட்டகளில் ஜூன் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாலாஜா வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா், கலவை வட்டாட்சியா் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும், வட்டாட்சியா் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடுப்புப் பணி நடைபெற்றுவருவதால், நிா்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாலாஜாபேட்டை, கலவை வருவாய் வட்டங்களில் 1429 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி, 19-ஆம் தேதி வரை நடைபெறும்.