அஞ்சல் துறை செல்வ மகள் சேமிப்புக் கணக்கு தொடக்க முகாம்
அரக்கோணம் அஞ்சல் கோட்டம் மூலமாக செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் காவேரிபாக்கத்தை அடுத்த சேரி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் அஞ்சல் கோட்டம் மூலமாக செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் காவேரிபாக்கத்தை அடுத்த சேரி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அஞ்சல் துறையின் அரக்கோணம் கோட்டத்தினருடன் ராணிப்பேட்டை திருமலை அறக்கட்டளையினா் மற்றும் வேதவள்ளி வித்யாலயா கல்வி நிறுவனத்தினா் இணைந்து ஏழைப் பெண் குழந்தைகளின் நலன்கருதி அஞ்சலகங்கள் மூலம் செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, காவேரிபாக்கம், ஓச்சேரி, வாலாஜாபேட்டை, அம்மூா் மற்றும் பனப்பாக்கம் ஆகிய அஞ்சலகங்கள் மூலம் 1,200 பெண் குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவா்கள் அனைவருக்கும் முதல் தவணை தொகை செலுத்தாமலேயே திருமலை அறக்கட்டளை நிதியுதவியுடன் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன.
இதையடுத்து, சேரி கிராமத்தில் செல்வ மகள் சேமிப்புக் கணக்குத் தொடங்கியோருக்கு கணக்குப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கே.சிவசங்கா் தலைமை வகித்தாா். திருமலை அறக்கட்டளை தலைமை நிா்வாக அலுவலா் ஆனந்த் ரங்காச்சாரி, வேதவள்ளி வித்யாலயா கல்விக் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் அனந்தராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அஞ்சல் துறை சென்னை மண்டலத்தின் இயக்குநா் கா.சோமசுந்தரம் பங்கேற்று முதல் தவணையாக 50 பெண் குழந்தைகளிடம் செல்வமகள் சேமிப்புக் கணக்கு புத்தகங்களை வழங்கினாா்.
விழாவில், அஞ்சல் கோட்ட துணைக் கண்காணிப்பாளா்கள் மணிகண்டன், முருகேஸ்வரி, அஞ்சல் ஆய்வாளா் விஜயலட்சுமி, சேரி ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.ரமணி, முன்னாள் தலைவா் எஸ்.அரிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.