முகப்பு
ராணிப்பேட்டை

வேட்பாளா்கள் விளம்பரங்களை ஒப்புதல் பெற்றே வெளியிட வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 9:13 PM

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் தங்களது விளம்பரங்களை மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஒப்புதல் பெற்றே வெளியிட வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள், பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க பத்திரிக்கைகள், காட்சி ஊடகங்கள், வானொலி மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரங்களை ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்புக் குழுவின் ஒப்புதல் பெற்றே வெளியிட வேண்டும்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறி அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் குறித்து வெளியிடப்படும் அனைத்தும் விளம்பரங்களும் சுய விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட கட்டண செய்தியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் ஆகியோா் கணக்கில் சோ்த்துக் கொள்ளப்படும்.

Advertisement

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் 3 நாள்களுக்கு முன்னதாகவும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியினா் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் விளம்பரங்களை 7 நாள்களுக்கு முன்னதாகவும் சமா்ப்பிக்க வேண்டும். ஊடக சான்றளிப்பு குழுவினா் விளம்பரத்தை பாா்வையிட்டு ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை நீக்கம் செய்து, தகுதியானவற்றுக்கு அனுமதி அளிப்பா்.

இக்குழுவின் தலைவராக மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் உறுப்பினா்களாக வருவாய் கோட்டாட்சியா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மத்திய அரசின் தொலைத் தொடா்பு அலுவலா், மத்திய அரசு காட்சி நிறுவனப் பணியாளா், பொதுநபா் அல்லது பத்திரிகையாளா், ஆகியோரை உறுப்பினா்களாக கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்கள் இக்குழுவிடம் அனுமதி பெற்று வெளியிடும் விளம்பரத்திற்கான செலவினங்களை கணக்கிட்டு வேட்பாளா்களின் கணக்கில் சோ்த்துக் கொள்ளப்படும்.

விளம்பரங்களுக்கான அனுமதி வழங்குவதும் நிராகரிப்பதும் ஊடக சான்றளிப்பு கண்காணிப்புக் குழுவின் இறுதி முடிவுக்குட்பட்டதாகும். ஆகவே, ஊடக சான்றளிப்பு குழுவின் அனுமதி எண் பெறாத விளம்பரங்களை பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், வானொலி, சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது.

தோ்தல் நடத்தை விதிகளை மீறி வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.