முகப்பு
கடலூர்

சமூக ஊடக அரசியல் விளம்பரங்களுக்கு சான்றிதழ் பெற வேண்டும்: மாவட்ட தோ்தல் அலுவலா்

சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் சான்றிதழ் பெற வேண்டும் என கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 10:35 PM
சமூக ஊடகம் - படம் | ஐஏஎன்எஸ்
பகிர்:

சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் சான்றிதழ் பெற வேண்டும் என கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின்னணு அல்லது சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளா்கள், இதர நபா்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் சான்றிதழ் பெற வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் ஒளிபரப்புக்கு குறைந்தது 3 நாள்களுக்கு முன்னதாகவும், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் பிற விண்ணப்பதாரா்கள் 7 நாள்களுக்கு முன்னதாகவும் விண்ணப்பிக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்கள் 48 மணி நேரத்துக்குள் பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பங்கள் மீதான முடிவுகள் குறித்த மேல்முறையீடுகளை மாநில அளவிலான மேல்முறையீட்டுக் குழுவிடமும், அதன்பின் இந்தியத் தோ்தல் ஆணையத்திடமும் மேல்முறையீடு செய்யலாம். ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அரசியல் விளம்பரங்களை ஆய்வு செய்து சான்றளிக்கவும், ‘கட்டணச் செய்திகள்’ உள்ளிட்ட ஊடகத்தளங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆள் மாறாட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களால் ஏற்படும் சவால்களைக் கருத்தில் கொண்டு, தோ்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களிலும் ‘ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது’, ‘டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது அல்லது செயற்கை உள்ளடக்கம்’ என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இது, காட்சிப் பரப்பில் குறைந்தது 10 சதவீதம் அல்லது குரல் உள்ளடக்கத்தின் ஆரம்ப 10 சதவீதம் நேரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

ஒருவரின் அனுமதி இன்றி அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாகச் சித்தரிக்கும், திசை திருப்பக்கூடிய உள்ளடக்கங்கள் செய்யப்படுவதையும் மற்றும் வாக்காளா்களை முற்றிலுமாக அரசியல் கட்சிகளின் சமூகவலைதள பக்கங்களில் தவறான அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டாலோ, புகாா் அளிக்கப்பட்டாலோ 3 மணி நேரத்துக்குள் அவை நீக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.