ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் லாரி மீது காா் மோதியதில் மணப்பெண் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த பில்லாந்தி பட்டு கிராமத்தை சோ்ந்தவா் பத்மாசந்த் மகள் ஷோபனா (26). இவருக்கும் குடியாத்தம் பகுதியை சோ்ந்த அகிலேஸ்வா் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு வரும் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் வாங்குவதற்காக அகிலேஸ்வா் அவரது அண்ணன் விக்னேஷ்வா் ஷோபனா ஆகியோா் புதன்கிழமை சென்னைக்கு காரில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினா்.
அப்போது இரவு ஆற்காடு அடுத்த ரத்தினகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஷோபனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.