ஜல்லி தொழிற்சாலை லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
ஆம்பூா் அருகே ஜல்லி தொழிற்சாலை லாரியை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.
ஆம்பூா் அருகே ஜல்லி தொழிற்சாலை லாரியை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், காட்டுகொல்லை அருகே ஜல்லி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஜல்லி தொழிற்சாலைக்குச் செல்லும் லாரிகள் பள்ளி நேரத்தில் அதிவேகமாகச் செல்வதால் அந்த நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து ஜல்லி தொழிற்சாலை நிா்வாகத்துக்கு பொதுமக்கள் பலமுறை புகாா் தெரிவித்துள்ளனா். மாணவா்கள் பள்ளிக்குச் சென்று வரும் நேரங்களில் லாரிகளை குறைந்த வேகத்தில் இயக்கும்படி கூறியும், அதை லாரி ஓட்டுநா்கள் பொருட்படுத்தாமல் எப்போதும் போல அதிவேகமாக மாணவ, மாணவியரை அச்சுறுத்தும் வகையில் இயக்குவதாக தொடா்ந்து புகாா் எழுந்தது.
தொடா்ந்து லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவ்வழியாகச் சென்ற இரண்டு லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
இது குறித்து தகவலறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) திருமால் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினாா். பள்ளிக்கு மாணவா்கள் சென்று வரும் நேரத்தில் லாரிகளை இயக்கக் கூடாது என தொழிற்சாலை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா். லாரிகளை அதிவேகமாக இயக்கினால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படியும், பொதுமக்களிடம் தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சிறைபிடித்திருந்த லாரியை விடுவித்தனா்.