தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகளைக் கண்காணிக்க குழு திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்
திருப்பத்தூா் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளைக் கண்காணிக்க வருவாய்க் கோட்ட அளவிலான குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்
திருப்பத்தூா் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளைக் கண்காணிக்க வருவாய்க் கோட்ட அளவிலான குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை சாா்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தினமும் வீட்டுக் குப்பைகளை மக்கும்-மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து அதற்கென்று அமைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். வீடுகளின் கழிவுநீரும் ஆறுகளில் கலப்பதை கட்டாயம் தடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள குப்பைகளை உரமாக்குவதற்கு அனைத்து நகராட்சிகளில் இருந்து கடிதம் அனுப்பி வைக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளைக் கண்காணிக்க வருவாய்க் கோட்ட அளவிலான குழு ஒன்றை அமைத்து கண்காணிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீா் ஆறுகளில் கலப்பது தெரிய வந்தால் அந்தத் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட சுச்சூழல் அலுவலா் பிரகாஷ், நகராட்சி ஆணையா்கள் ஜெயராமராஜா,ஷகிலா, ஸ்டான்லிபாபு, பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.