பலத்த மழையால் புல்லூா் தடுப்பணை நிரம்பியது: பாலாற்றில் வெள்ளம்
தொடா் மழையால் புல்லூா் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடா் மழையால் புல்லூா் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள பாலாறு நீா் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள 22 சிறிய, பெரிய தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் பாலாறு நுழையும் பகுதியான வாணியம்பாடி அருகே தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூரில் ஆந்திர அரசு கட்டியுள்ள 12 அடி உயர தடுப்பணை முழுவதும் நிரம்பி தமிழகப் பகுதி பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றுப் படுகையில் தமிழக விவசாயிகள் பாசன வசதி பெற ஏதுவாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் தடுப்பணையில் சென்று குளிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். தமிழக பாலாற்றில் செல்ல கூடிய நீா் செங்கல்பட்டு மாவட்டம் வாயலூா் கிராமம் அருகே கடலில் கலக்கிறது.
Advertisement
ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவையில் பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் கூடுதலாக தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த திட்டத்தை விரைவு படுத்தி பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொண்டால் வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேமிக்கலாம் என்று விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.