வாணியம்பாடி அருகே பயிற்சி மருத்துவா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தாசிரியப்பனூா் மாரிகான் வட்டத்தைச் சோ்ந்த முனிராஜ் மகன் மாரிமுத்து(22). இவா் எம்பிபிஎஸ் முடித்து விட்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சதீஷ், தாய் ஞானம்மாவுடன் வீட்டில் தங்கியிருந்தாா்.
சனிக்கிழமை இரவு வீட்டின் அறையில் சதீஷ் தூங்கச் சென்றாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஞானம்மாள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகனை சென்று பாா்த்த போது மயங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த உறவினா்கள் உடனே சதீஷை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சதீஷை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு வந்து உறவினா்களிடம் விசாரித்தனா். சதீஷின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சதீஷ், தனக்குத் தானே மயக்க ஊசி போட்டு கொண்டது தெரியவந்துள்ளது.