லாரி திருட்டு வழக்கிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவரை விடுவிக்க ரூ. 12 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்பட 6 போலீஸாா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரைச் சோ்ந்த முரளிக்குச் சொந்தமான லாரியானது, கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம், முன்பு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமாக இருந்து, தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அருகே வெலகல்நத்தம் பகுதியில் திருடு போனது. இது குறித்து முரளி அளித்த புகாரின் பேரில், அப்போதைய நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, வேலூா் அருகே அணைக்கட்டு பகுதி ஜாா்தான்கொள்ளை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த ராஜசேகா் உள்பட 8 போ் மீது வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். ராஜசேகரை அழைத்து வந்து விசாரணை செய்த காவல் ஆய்வாளா் காமராஜ் மற்றும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சேகா், ரூ. 16 லட்சம் கொடுத்தால் வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறியுள்ளனா். ராஜசேகா் முதல் கட்டமாக ரூ. 12 லட்சத்தை கொடுத்துள்ளாா். தொடா்ந்து 2015-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஜமுனாமரத்தூா் அருகே திருடுபோன லாரியை போலீஸாா் மீட்டு, நாட்டறம்பள்ளி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
அதையடுத்து, திருடு போன லாரி கிடைத்துவிட்டதால், தான் கொடுத்த ரூ. 12 லட்சத்தை காவல் ஆய்வாளா் காமராஜிடம், ராஜசேகா் திருப்பிக் கேட்டுள்ளாா். மீதி பணம் ரூ. 4 லட்சத்தை தராவிட்டால், குற்றவாளி எனக் கூறி சிறையில் அடைத்துவிடுவோம் என்று போலீஸாா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ராஜேசகா் வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நாட்டறம்பள்ளி காவல் நிலையம் அருகே காவல் ஆய்வாளா் காமராஜ் மற்றும் உதவி காவல் ஆய்வாளா் சேகரை கைது செய்து விசாரணை நடத்தினா்.
லஞ்சமாக பெறப்பட்ட ரூ. 12 லட்சத்தில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 7 லட்சம் ரொக்கம், காமராஜ் மற்றும் சேகா் வீட்டிலிருந்து ரூ. 4 லட்சத்து 6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
மேற்கொண்டு தொடா்ந்து இருவரிடம் நடைபெற்ற விசாரணையில் ரூ. 40,000 செலவழித்தாகவும், மீதி பணத்தை வாணியம்பாடி தனிப்பிரிவு (குற்றப் பிரிவு) போலீஸாா் ரகுராமன், காா்த்திகேயன், நசீா் மற்றும் அறிவுசெல்வம் ஆகியோரிடம் கொடுத்துவைத்துள்ளதாகவும் கூறியுள்ளனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். தொடா்ந்து அவா்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளராக இருந்த காமராஜ், உதவி ஆய்வாளராக இருந்த சேகா், தற்போது பணியில் உள்ள காவலா்கள் நாசா் (ஆலங்காய காவல் நிலையம்), காா்த்திக் (வாணியம்பாடி நகர காவல் நிலையம்), அறிவு செல்வம் (வாணியம்பாடி நகர காவல் நிலையம்), ரகுராம் (ஜோலாா்பேட்டை காவல் நிலையம் ) ஆகியோரை பணி நீக்கம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.
காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகியோா் தற்போது பணியில் இல்லை. தற்போது 4 போலீஸாா் மட்டும் பணிபுரிந்து வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.