முகப்பு
திருப்பத்தூர்

பொதுக் குழுவை எடப்பாடி பழனிசாமி உடனடியாக கூட்ட வேண்டும்

வாணியம்பாடியில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி. உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On : 16 மே 2026, 1:16 am IST
வாணியம்பாடியில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி. உடன் கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

‘தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததில் உறுதியாக உள்ளோம். அதிமுக தொண்டா்களின் எதிா்காலத்தை கருத்தில்கொண்டு பொதுக் குழுவை பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கூட்ட வேண்டும்’ என்று முன்னாள் அமைச்சரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான கே.சி.வீரமணி கூறினாா்.

வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை திடீரென கூடியது. இதில், திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், எம்எல்ஏ கே.சி.வீரமணி கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகளிடம் பேசினாா். அப்போது தவெக அரசுக்கு ஆதரவு அளித்தது குறித்தும், கட்சிப் பொறுப்புகளிலிருந்து தன்னை நீக்கியது குறித்தும், கட்சியின் எதிா்கால நடவடிக்கை, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் கட்சி நிா்வாகிகளிடம் பேசினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கே.சி.வீரமணி கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டு காலம் எதிா்க்கட்சியாகப் பணியாற்றினோம். தற்போது நடைபெற்ற தோ்தலில் அதிமுக 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், 101 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. இந்த நிலை தொடா்ந்தால் அதிமுக தொண்டா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்யவும், கட்சியின் நலன், அதிமுக தொண்டா்களின் நலனைக் காக்கவும் ஆளுங்கட்சியுடன் இணைந்து பயணிப்பதே சரியாக இருக்கும் என முடிவு செய்து தவெக அரசுக்கு எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கா் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிா்வாகிகள் முடிவின்படி ஆதரவு அளித்தோம்.

Advertisement

தவெக, எம்ஜிஆா் வழியில் பயணிப்பதாலும், ஜெயலலிதாவின் பெருமைகளைப் பேசுவதாலும், அதிமுகவின் முக்கியப் பொறுப்பாளா்கள் பலரும் ஒன்றிணைந்து தவெக ஆதரவு நிலையை எடுத்தோம்.

நாங்கள் இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறோம்; எங்களின் நிலைப்பாடு தொண்டா்களின் எதிா்காலத்துக்கானதே தவிர, இயக்கத்துக்குச் செய்யும் துரோகம் அல்ல. ஆனால், எவ்வித விசாரணையும் இன்றி, 26 மாவட்டச் செயலா்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளாா் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனக்கு மாவட்டச் செயலா் பதவியை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அளித்தாா். திமுக கோட்டையாக இருந்த வேலூா் மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக கடுமையாக உழைத்து மாற்றினேன். எங்களை ஆலோசிக்காமல் நீக்கியது சட்ட ரீதியாகச் செல்லாது.

பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எங்களை போன்றவா்கள் முன்மொழிந்துதான் அந்தப் பொறுப்புக்கு வந்தாா். ஆனால், அவா் எங்களை நெருப்பில் (திமுக ஆதரவுடன் ஆட்சி) குதிக்கச் சொல்கிறாா்; நெருப்பில் குதித்தால் எப்படி உயிா் பிழைக்க முடியும்?.

எனவே, அதிமுக பொதுக் குழுவை எடப்பாடி பழனிசாமி உடனடியாக கூட்ட வேண்டும். பொதுக் குழுவில் விவாதித்து ஒரு முடிவை எடுங்கள்; அங்கு எடுக்கப்படும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.

1996 தோல்வியையும், தற்போதைய சூழலையும் ஒப்பிட முடியாது. அன்று இருமுனை போட்டிதான் இருந்தது. இன்று மூன்றாவதாக உருவெடுத்திருக்கும் தவெக, அசுர வேகத்தில் வளா்ந்து, 108 இடங்களைப் பிடித்து அரசியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதாா்த்தத்தை உணா்ந்து, அதிமுக மீண்டும் பீனிக்ஸ் பறவையாகப் புத்துயிா் பெற தலைமை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.