பெரியார் விருது: சமூக சேவகர்கள் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுபெற சமூக சேவகர்கள் வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுபெற சமூக சேவகர்கள் வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுகிறவர்களை சிறப்பு செய்யும் நோக்கில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், நிகழாண்டில் இந்த விருது வழங்குவதற்கு சமூக சேவகர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு சமூக நீதிக்காக பாடுபட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் முன்னேற்றத்துக்கு பாடுபட்டிருக்க வேண்டும். மேலும், கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொண்ட பணிகள், கடந்த ஆண்டிலும் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன், அவர்களது பெயர், சுயவிவரம், முழு விவரங்களுடன் நவம்பர் 10-ஆம் தேதிக்குள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விருது பெறும் சமூக சேவகருக்கு ரூ. 1 லட்சம் பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.