திருவள்ளூரில் அம்பேத்கரின் 128-ஆவது பிறந்த தின விழாவில் பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊழியர்கள் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி பேசுகையில், "அரசியல்சட்டவிதிகள் மூலம் தேச மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தவர் அம்பேத்கர். அறிவுக் களஞ்சியமான நூலகத்திலேயே தனது வாழ்நாளில் அதிக நேரத்தைச் செலவிட்டவர்' என்றார்.
விழாவில், ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேசுகையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் அம்பேத்கர். கல்வியின் மூலமே சமத்துவம் பெற முடியும் என்பதை உணர்த்தியவர். அவரால்தான் நாம் தற்போது அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
தாட்கோ மேலாளர் சாந்தி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச் சங்கத்தின் தலைவர் ஜெயதென்னரசு, மாவட்ட அரசு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர்களான நீலவானத்து நிலவன், பேராசிரியர் ரவிச்சந்திரன், எஸ்சி, எஸ்டி ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.