திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் வழங்க கோரி பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு திருநங்கைகள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே செங்குன்றம், பகுதியில் காந்திநகரில் வாடகை குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்கியிருந்து கறவை மாடுகள், கடை பரப்பும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரோனா நேரத்தில் வருவாய் குறைந்த காரணத்தால் வாடகை கொடுக்க முடியாத நிலையில் வெளியேற்றி விட்டனர். ஆனால், அதற்கு முன்னதாக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கும் பசுமை குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அதனால், திருநங்கைகளுக்கான அரசாணையில் குறிப்பிட்டுள்ள வீடு மனை பகுதிகளில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து வீடுகள் அமைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் பாத்திரங்களை வைத்தும், படுத்துக் கொண்டும் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக திருநங்கை சைலஜா கூறுகையில், செங்குன்றம் காந்திநகர் பகுதியில் கறவை மாடுகள், பாசிமணி விற்பனை செய்தல், கடைகள் வைத்தல் ஆகிய சுயதொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.
இந்த நிலையில் திருநங்கைகளுக்கு தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் வழங்கக் கோரி பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.