முகப்பு
திருவள்ளூர்

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் 165 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு.
பகிர்:

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் வரத்தால் பூண்டி ஏரியில் 1211 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதை தொடர்ந்து சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் 165 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்கி வருகிறது. கடந்த மாதம் 18-ஆம் தேதிக்கு முன்பு வரையில் போதிய மழை மற்றும் நீர் வரத்தின்றி ஏரி இருந்தது. இந்த நிலையில் இந்த ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். 

இந்த ஒப்பந்த அடிப்படையில் இப்பருவத்திற்கான தண்ணீர் கடந்த மாதம் செப்.18-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்ட நிலையில், 21-ஆம் தேதி அதிகாலையில் பூண்டி ஏரியை வந்தடைந்தது.
 இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3231 மில்லியன் கனஅடி நீர் வரையில் சேமித்து வைக்கலாம். கடந்த 20 நாள்களில் கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாக, இதுவரையில் 1211 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீர் வரத்து என தற்போது 745 கன அடி நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. 

இதனால், பூண்டி ஏரியில் இருந்து சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகையில் இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 165 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. தற்போது, பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு சனிக்கிழமை முதல் திறந்து விடப்பட்டுள்ளது. 

மேலும், கால்வாயில் நீர் சென்று கொண்டிருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. மேலும் நீர் வரத்தோடு செல்லிடப்பேசியில் புகைப்படம் பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →