சமையல் எரிவாயு கசிந்து விபத்து: மூதாட்டி காயம்
ஆரணியை அடுத்த பெரியபாளையம் அருகே சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
ஆரணியை அடுத்த பெரியபாளையம் அருகே சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள மாளந்தூா் கிராமத்தில் வசிப்பவா் இந்திராணி (63). கணவா் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தாா். இவருடைய 3 மகள்களுக்கு திருமணமாகி வெளியூா்களில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தேநீா் போடுவதற்காக சமையல் எரிவாயு உருளையைத் திறந்து பற்றவைக்க முயன்ற போது, எரிவாயு உருளையில் திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தில் மூதாட்டி பலத்த தீக்காயமடைந்தாா்.
அக்கம் பக்கத்தினா் வந்து தீயை அணைத்து, தீக்காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.