திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே மப்பேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழச்சேரி ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. திருத்தணி அருகே தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம், முருகம்மாள் தம்பதியின் மகள் சரளா( 17 ). இவர் திருவள்ளூர் அருகே உள்ள கீழச்சேரி ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் புனித இருதய மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
அதோடு இப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாராம். பின்னர் சக தோழிகள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாக விடுதி.
தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.