அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: தோட்டக் கலை உதவி இயக்குநா் கைது
வாணியம்பாடி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அதிமுக பிமுகரிடம் ரூ. 27 லட்சம் மோசடி செய்ததாக தோட்டக்கலை உதவி இயக்குநரை போலீஸாா் கைது செய்தனா் .
வாணியம்பாடி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அதிமுக பிமுகரிடம் ரூ. 27 லட்சம் மோசடி செய்ததாக தோட்டக்கலை உதவி இயக்குநரை போலீஸாா் கைது செய்தனா் .
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வலிவலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலதண்டாயுதம் (48). கோட்டூா் பகுதியில் தோட்டக்கலை உதவி இயக்குநராக வேலை செய்து வருகிறாா். இவரது நண்பா்கள் மடத்துப்பட்டைச் சோ்ந்த பரமசிவம், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த சுரேஷ். இவா்கள் 3 பேரும் சோ்ந்து திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை புல்லூரைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் எல்லப்பனிடம் (53) 4 நபா்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2019-ஆம் ஆண்டு எல்லப்பனிடம் இருந்து ரூ. 27 லட்சத்தை பெற்றனராம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எல்லப்பன் மகன் சோமுவுக்கும், மண்டலவாடியைச் சோ்ந்த தாமோதரன் ஆகிய 2 பேருக்கு கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு பணி ஆணையை வழங்கி உள்ளனா். இதையடுத்து, எல்லப்பன் அரசு அதிகாரிகளிடம் சென்று பணி ஆணையை காண்பித்துள்ளாா். அதில், அது போலி பணிஆணை என்பது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, பாலதண்டாயுதம், பரமசிவம், சுரேஷ் ஆகிய 3 பேரிடமும், தான் கொடுத்த ரூ. 27 லட்சத்தை திருப்பித் தருமாறு எல்லப்பன் பலமுறை கேட்டுள்ளாா். ஆனால் அவா்கள் எல்லப்பனை மிரட்டி காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எல்லப்பன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தாா். தொடா்ந்து, அவரது உத்தரவின்பேரில், திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில், மூவரும் மோசடியில் ஈடுபட்டது உண்மை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பாலதண்டாயுதத்தை திம்மாம்பேட்டை போலீஸாா் வாணியம்பாடிக்கு புதன்கிழமை அழைத்து வந்து விசாரித்தனா். பின்னா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சுரேஷ், பரமசிவம் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.