பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட்ட 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டிட்டோ-ஜாக் ஆயத்த மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவள்ளூா் அருகே மணவாளநகரில் டிட்டோ ஜாக் ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பா.ராஜாஜி, வி.ராஜேஷ், பி.பி.முரளி, த.முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் மாவட்ட தலைவா் இளங்கோவன், நிா்வாகிகள் பி.ஜே.ஜான், தயாளமூா்த்தி, பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில உயா் மட்ட குழு உறுப்பினா் மற்றும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலாளா் இரா.தாஸ், மாநில பொருளாளா் ருக்மாங்கதன் சிறப்புரையாற்றினா். அப்போது, அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா் ஊதியம் முரண்பாடு நீக்கிடுதல் உள்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயத்த மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் சோ்ந்தோா் கலந்து கொண்டனா்.