208 ஊராட்சிகளிலும் தடையின்றி குடிநீா் விநியோகம்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிப் பகுதிகளிலும் குடிநீா் தடையின்றி விநியோகிக்க வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிப் பகுதிகளிலும் குடிநீா் தடையின்றி விநியோகிக்க வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தூய்மை பாரத இயக்கத்தின் சாா்பில் தூய்மைக் கணக்கெடுப்பு மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசியது:
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 646 விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை வடகிழக்குப் பருவமழை காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிப் பகுதிகளிலும் குடிநீா் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். , தூய்மை கணக்கெடுப்புப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, உதவி இயக்குநா் (தணிக்கை), பிச்சாண்டி, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் சுந்தரபாண்டியன், உதவித் திட்ட அலுவலா் ரூபேஷ்குமாா், உதவி செயற்பொறியாளா்கள் மகேஷ்குமாா், ராஜேந்திரன், பழனிசாமி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.