திருவண்ணாமலை அருகே ஏரியில் இருந்து மண் கடத்திய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலையை அடுத்த சமுத்திரம் ஏரியில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் புகார்கள் சென்றன. இந்நிலையில், திருவண்ணாமலை தாலுகா போலீஸார் சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளிக்கொண்டிருந்த திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (21), பாண்டியதுரை (20), வேளையாம்பாக்கம் கிராமம் பிரதாப் (24), கோட்டாங்கல் கிராமம் பார்த்திபன் (30), திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமம் சேகர் (45) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன் (எ) திருப்பதி பாலாஜி (47) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.