முகப்பு
திருவண்ணாமலை

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலய தேர் பவனி

சேத்துப்பட்டில் தூய லூர்து அன்னை தேவாலயம் சார்பில் திங்கள்கிழமை இரவு சிறப்பு தேர் பவனி நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:15 am IST
பகிர்:

சேத்துப்பட்டில் தூய லூர்து அன்னை தேவாலயம் சார்பில் திங்கள்கிழமை இரவு சிறப்பு தேர் பவனி நடைபெற்றது.
சேத்துப்பட்டு - போளூர் சாலையில் உள்ள வேலூர் மறை மாவட்டத்தின் கத்தோலிக்க கிறிஸ்தவ புகழ் பெற்ற திருத்தலமாக விளங்கும் தூய லூர்து அன்னை தேவாலயத்தின் பெரு விழா, கடந்த 8-ஆம் தேதி மாலை பங்குத்தந்தை அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற ஆராதனை சிறப்புத் திருப்பலியுடன் தொடங்கியது.
9-ஆம் தேதி மாலை அருட்தந்தை லூவாதாமஸ் தலைமையில் ஆராதனையும், திருப்பலியும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை மாலை அருட்தந்தை இயேசு துரை தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 7 மணிக்கு திருப்பலியும், 11 மணிக்கு நெடுங்குணம் மாதா மலையில் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு தூய லூர்து அன்னை திருத்தலத்தில் வேலூர் மறை மாவட்ட முதன்மைகுரு அருட்தந்தை ஜான் ராபர்ட் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு தூய லூர்து அன்னை மலர்களாலும், மின்சார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, போப்பாண்டவர் தெரு, பாத்திமா தெரு ,அரசமரத் தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக வீதியுலா நடைபெற்றது.
அப்போது, சேத்துப்பட்டு லூர்து நகர், நிர்மலா நகர், தச்சாம்பாடி, பத்தியாவரம், மோசவாடி, நந்தியம்பாடி, வேப்பம்பட்டு, மோரைக்கனியனூர், இந்திரவனம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஜெபமாலை பாடியபடி உடன் சென்றனர்.
தூய லூர்து அன்னை காட்சி அளித்த நாள் என்பதால், இந்த தேர் பவனி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள், அருள் சகோதரர்கள், சகோதரிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.