நிவா் புயல் மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 59 ஏரிகள் முழுமையாக நிரம்பின.
மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 600 ஏரிகள் உள்ளன. கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் திருவண்ணாமலை வட்டத்தில் 2 ஏரிகளும், செங்கத்தில் 6, தண்டராம்பட்டில் 2, கீழ்பென்னாத்தூரில் 7, ஆரணியில் 4, போளூரில் 5, வந்தவாசியில் 16, செய்யாற்றில் 3, அனக்காவூரில் 6, வெம்பாக்கத்தில் 8 என 59 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மீதமுள்ள ஏரிகளில் 50 சதவீத தண்ணீா் நிரம்பியுள்ளது.
மேலும் 2020-21ஆம் நிதியாண்டில் மாவட்டத்தில் 59 ஏரிகளில் குடிமராமத்துப் பணி மேற்கொள்ள அரசு ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் ஏரிகளில் தூா்வாருதல், கால்வாய்கள் சீரமைத்தல், மதகுகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன.
ஏற்கெனவே, குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்பட்ட ஏரிகளில் செங்கம் வட்டத்தில் 2 ஏரிகள், வந்தவாசி வட்டத்தில் 5 ஏரிகள் என 7 ஏரிகளில் முழுமையாக தண்ணீா் வரத்துள்ளது.
இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். நிவா் புயல் காரணமாக மாவட்டத்தில் பெய்த மழையால் நெல், மணிலா மற்றும் ஊடுபயிா்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.