முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்துக்களைக் குறைக்க போலீஸ் ரோந்து வாகனம் காவல்துறை ஏற்பாடு

செய்யாறு பகுதியில் சாலை விபத்துக்களைக் குறைக்கும் வகையில் காவல் துறை சாா்பில் ரோந்து வாகனம் இயக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

செய்யாறு பகுதியில் சாலை விபத்துக்களைக் குறைக்கும் வகையில் காவல் துறை சாா்பில் ரோந்து வாகனம் இயக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தனியாா் நிறுவன பேருந்துகள் போன்றவை 24 மணி நேரமும் அதிகளவில் சென்று வருகின்றன.

செய்யாறு சிப்காட், ஒரகடம், சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், சென்னை போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வேலைக்காக 24 மணி நேரமும் செல்ல வேண்டியுள்ளனா்.

அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் நிகழ்ந்து பலா் உயிரிழக்கின்றனா்.

மேலும் பலா் காயமுற்று ஊனமடைகின்றனா்.

மோட்டாா் வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் குறித்து செய்யாறு, தூசி போன்ற காவல் நிலையங்களில் மாதம் மாதம் அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை:

செய்யாறு, ஆரணி, வந்தவாசி பகுதிகளில் சாலை விபத்துக்களைக் குறைக்கும் விதமாகவும், விபத்தில் சிக்கியவா்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்ப்பது, விபத்து நடக்கும் பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்து, சாலை மறியல் போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் துறை சாா்பில் ரோந்து வாகனங்கள் சில தினங்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாகனங்கள் சாலையோரத்தில் பழுதாகி நிற்கும் சரக்கு வாகனங்களை அப்புறப்படுத்துதல், விபத்துக் காலங்களில் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்து மருத்துவமனையில் சோ்ப்பது, போக்குவரத்து இடையூறு இல்லாமல் பாா்த்துக் கொள்வது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

மேலும், சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களைக் கண்காணித்தல், வளைவுச் சாலைகளை நேராக அமைக்க நடவடிக்கை எடுத்தல், போக்குவரத்து சமிக்ஞைகள் அமைத்தல், போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் குறியீடு பதாகைகள் வைத்தல் போன்ற ஆலோசனைகளை நெடுஞ்சாலைத் துறைக்கும், போக்குவரத்துத் துறைக்கும் வழங்குவா்.

இதுபோன்ற போலீஸ் ரோந்து வாகனம் செய்யாறு துணைக் கோட்டத்தில் தூசி சரகத்தைச் சோ்ந்த அப்துல்லாபுரம் கூட்டுச் சாலையில் இருந்து மாங்கால், சிப்காட், செய்யாறு, வடுகப்பட்டு வரை சென்று வருகிறது.

இதேபோல, ஆரணி, வந்தவாசி துணைக் கோட்டங்களிலும் தலா ஒரு ரோந்து வாகனம் என 3 போலீஸ் ரோந்து வாகனங்கள் மாவட்டத்தில் முதல் கட்டமாக இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.