போளூா்: சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி கிராமத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
ஓதலவாடி கிராமம் அருகே செல்லும் செய்யாற்றில் இருந்து, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் உரிய அனுமதி பெறாமல் மணலை மாட்டு வண்டிகளில் எடுத்து வந்து, அங்குள்ள அரசுப் பள்ளி வளாகம் மற்றும் மறைவான இடங்களில் குவித்து வைத்திருந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், பிற அலுவலா்களுடன் சென்று பதுக்கி வைத்திருந்த சுமாா் 10 யூனிட் மணலை பறிமுதல் செய்தாா்.
இதுகுறித்து போளூா் பொதுப்பணித் துறை (நீா்பாசனம்) உதவி செயற்பொறியாளா் ராஜகணபதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.