"தொழில் முனைவோராக பெண்கள் உருவாக வேண்டும்'
பெண்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் கூறினார்.
பெண்கள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் கூறினார்.
ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் 15-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரித் தலைவர் கே.ஆர்.பாஸ்கரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.பி.சுமலதா பாஸ்கரன், ஷிபா கிஷண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே.பி கிஷண்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டி.சிவா ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:
கிராமப்புற பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. உலக அளவில் சிறந்த தலைவராக பிரதமர் மோடி கருதப்படுகிறார்.
தற்போது, பெண்களின் மேம்பாட்டிற்கு பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சுய தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
முத்ரா திட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. பட்டம் பெறும் மாணவிகளாகிய நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை வழங்குபவராக மாற வேண்டும்.
தொழில் முனைவோர்களாக உருவாவதன் மூலம் பெண்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.
கல்வியில் சிறந்து விளங்கும் தகுதியும், திறமையும் உள்ள மாணவிகளுக்கு வெளி நாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகள் படிக்க மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
மாணவிகள் அரசின் திட்டங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே வேலையில் அரசிடம் தனக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும் .அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்ற 4 மாணவிகள், தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 17 மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், இளநிலை, முதுகலை மாணவிகள் 858 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
விழாவில், அரசு அலுவலர்கள், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.